
முதிர் வளையம் அல்லது கருவிழிப்படல முதிர் வளையம் (arcus senilis corneae) என்பது வெண்மையான அல்லது சாம்பல்நிறமான ஒளிபுகாத வளையமொன்று கருவிழிப்படலத்தைச் (cornea) சுற்றிக் காணப்படுவது ஆகும். இது பிறப்பின்போது காணப்பட்டுப் பின்னர் மறைந்துவிடும், எனினும் 60 – 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவாகக் காணப்படலாம், குருதியில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளோரில் அல்லது நீரிழிவு நோயுள்ளவர்களில் ஆரம்பகாலங்களிலேயே (40 வயதளவில்) தோன்றலாம், எனினும் இது எவ்வித நோய்கள் இல்லாமலும் தோன்றலாம், அத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட நபருக்கும் குடும்பத்தில் உள்ளோருக்கும் பரம்பரை உயர் குருதிக் கொலஸ்ட்ரால் நோய் உண்டா எனப் பார்ப்பது சாலச் சிறந்தது.
பொதுவாக இவ்வளையம் கருவிழிப்படலத்தின் ஏதாவது ஒருபகுதியைச் சுற்றி பிறைவடிவான வளையமாக அல்லது கருவிழிப்படலத்தை முற்றாகவும் சூழ்ந்து முழுவட்டமாகக் காணப்படும்.
கருவிழிப்படலத்தைச் (cornea) சுற்றிக் கொழுப்புப் படிவதே இதன் காரணமாகும். ஒருபக்கக் கண்ணில் மட்டும் தோன்றினால் இவ்வளையம் தோன்றாத கண்ணுக்குக் குருதியோட்டம் குறைவு எனக் கருதவேண்டும்.